Published : 08 May 2025 02:03 PM
Last Updated : 08 May 2025 02:03 PM
மேஷம்: சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள் அடிமனதில் ஒன்றை குறி வைத்துவிட்டால் அதை அடையாமல் விடமாட்டீங்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 3-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். தனது பார்வை அருளால் நல்ல மாற்றங்களைத் தரப்போகிறார். இதுவரை உங்களின் மனதில் இருந்த குழப்பங்கள், தயக்கம் அனைத்தும் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். எனினும், குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பதால், நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகத்தான் செய்யும்.
குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இரண்டாவதாக ஒரு யோசனையை வைத்துக் கொள்ளுங்கள். முதல் யோசனை சறுக்கினாலும், இரண்டாவது கைகொடுக்கும்.
குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, வீடு, மனை வாங்குதல், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் செல்வதால் வழக்குகள் வெற்றி அடையும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடத்துவீர்கள். திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும்.
உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான குரு, அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை செல்வதால் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல், செலவு, டென்ஷன் இருக்கும். ஆனால் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணவரவு, வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டு பயணமும் உண்டு. கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சுபச் செலவுகளும், பிள்ளைகளால் சந்தோஷமும் வந்து சேரும். அனைத்திலும் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தன்னம் பிக்கையுடன் செயல்படுவீர்கள். சொத்து வாங்குவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், வருங்கால சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. கூட்டுத் தொழிலில் சில பிரச்சினைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்து போகவும். சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியது வரும். சிலருக்கு, விரும்பத்தகாத இடமாற்றமும் வந்து சேரலாம். பொறுமையுடன் இருங்கள். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர் வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள்.
இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், தெளிவான சிந்தனையையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பிருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT