Published : 25 Apr 2025 07:44 PM
Last Updated : 25 Apr 2025 07:44 PM
துலாம்: (சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- 26.04.2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.04.2025 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: துலா ராசி அன்பர்களே! இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச்சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்கும்.
முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக்கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்சினை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அநாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.
தொழில்துறையினருக்கு: சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மனஉளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உபதொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன்பு ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. முடிந்த வரை பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன்களை பைசல் செய்வீர்கள். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு: உங்களுக்குக் கிடைக்கும் சிறுவாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் - பின்னணி இசைக்கலைஞர்கள் - நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சககலைஞர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
மாணவமணிகளுக்கு: கல்வியில் சிறிது ஆர்வக்குறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு: உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் சரியான பதவிகளை அளிப்பர். சிலருக்கு அரசுவாகனங்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மனஉறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு: குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.
நட்சத்திர பலன்கள்: சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
சுவாதி: இந்த பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப்போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9 | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி | ராகு கேது கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT