Last Updated : 09 Apr, 2025 04:26 PM

 

Published : 09 Apr 2025 04:26 PM
Last Updated : 09 Apr 2025 04:26 PM

விருச்சிகம் ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்கள்: எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தன்னம்பிக்கையே தாரகமந்திரம் என்கிற ரீதியில் பணிபுரிவீர்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகமும் குழந்தை வேண்டி எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். உங்களுடன் பாராமுகமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களும் கூட்டாளிகளும் தற்போது நேசக்கரம் நீட்டுவர். உங்கள் சொல்கேட்டு நடந்துகொள்வதுடன் உங்களின் மதிப்பையும் உயர்த்திவிடுவர். சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள். உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள்.

சிறந்த பேச்சாளர் என்கிற நிலைக்கு உயர்வுண்டாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும் சலுகைகளையும் பெறுவர். நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு விடுவர். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர். திறமையை வளர்த்துக்கொள்வர்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மைகளைக் காண்பர். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். விற்பனை பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்றுவர். அதிக லாபம் தரும் பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். சிறிய அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்த முனைவர்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரச்சாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர்.

கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவர். புதிய வாய்ப்புகளும் வரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பொருளாதார வசதிகள் மேம்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். புகழ் வளரும்.

பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது.

மாணவமணிகள் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்கள் பெறுவர். உடன்பிறந்தோரின் உதவிகளால் கல்வியில் முன்னேறுவர். பயிற்சியும் முயற்சியும் உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பழகுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள்.

அனுஷம்: இந்த ஆண்டு கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

கேட்டை: இந்த ஆண்டு உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் நன்மை தரும். செவ்வாய் - குரு - சுக்கிரன் ஹோரைகள் அனுகூலமாக இருக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x