Last Updated : 08 Apr, 2025 07:04 PM

 

Published : 08 Apr 2025 07:04 PM
Last Updated : 08 Apr 2025 07:04 PM

கன்னி ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்கள்: உழைப்பின் மூலம் உன்னதமான இடத்தைப் பெறும் கன்னி ராசி அன்பர்களே! முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

பழைய கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும். சமூகத்தில் மதிப்பு, கவுரவம் இரண்டும் உயரத் தொடங்கும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள். வெளிப்படையாகப் பேசுவதையும் தவிர்க்கவும். பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.

அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்ப்புகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுடன் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் பெறுவர்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய பொருள்களை விற்பனை செய்து மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். மேலும் போட்டியாளர்களின் மனமறிந்து சந்தையில் விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பெரிய சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளின் பலம் குறையும். சிலருக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து விடுவிக்கப்படுவர். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தையும் பெறுவர். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவர். மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவதோடு, கடமைகளில் சலிப்பு உண்டானாலும் மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவர். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர்.

மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வதுடன் வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரமும் போடுவீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம், லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.

அஸ்தம்: இந்த ஆண்டு புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சினைகள் வரலாம்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். “துளசி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வரத் தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சினைகள் மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலம் தரும். புதன் குரு ஹோரைகள் நன்மையைத் தரும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x