Last Updated : 08 Apr, 2025 06:30 PM

 

Published : 08 Apr 2025 06:30 PM
Last Updated : 08 Apr 2025 06:30 PM

கடகம் ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

கடகம்: (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்கள்: குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள் உங்களை நாடி நட்பு கொள்வார்கள். சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். எதிரிகளுக்கும் உதவி செய்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வந்து சேரும். அதேநேரம் புறம் பேசுபவர்களின் உறவைத் தவிர்த்து விடவும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும்.

குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவர். குடும்பத்தில் திருமணம் புத்திரபிராப்தி ஆகியவைகளும் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகத் தொடரும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிக ஆலய விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். பொது ஜனத்தொடர்பு பலப்படும். தவறு செய்யும் நண்பர்களை நேரடியாகக் கண்டிப்பீர்கள். குடும்பத்தில் சுகம் நிறையும். உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாக்குக்கு நன்மதிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்கையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திருட்டுப்போன பொருளும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறி நன்மை செய்வார்கள். சிலருக்கு வீடு மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். மேலும் குழந்தைகளுக்குச் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். அதோடு வழக்குகளும் தாமதமாகும். கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் காரியமாற்ற வேண்டிய காலக்கட்டமிது.

உத்தியோகஸ்தர்கள் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவதில் தாமதங்கள் உண்டாகலாம். எண்ணங்கள் பூர்த்தியாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடவும்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு உதவுவர். தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய நட்புகளால் சந்தோஷம் கிடைக்கும். வேலையில் மட்டுமே குறியாக இருக்கவும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைவாக இருக்காது. நிதானமாகவும், பொறுமையுடனும் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள், கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். ஞாபகசக்தி வளர விடியற்காலையில் பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பூசம்: இந்த ஆண்டு உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

ஆயில்யம்: இந்த ஆண்டு எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக மறையும்.

பரிகாரம்: முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். “அல்லி மலரை” அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும். மேற்கு, வடக்கு திசைகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சந்திரன் - குரு ஹோரைகள் நன்மையைத் தரும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x