Published : 15 May 2021 03:14 AM
Last Updated : 15 May 2021 03:14 AM
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10-ம் தேதிமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள், தேனீர் கடைகள்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருவோர் மீது கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கை வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால் தூத்துக்குடியில் பகல் 12 மணிக்கு பின்னரும் சாலைகளில் வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இளைஞர்கள் உட்பட பலரும் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றுகின்றனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 நாட்களாகியும் கரோனா பாதிப்பு குறையவில்லை. ஊரடங்கு போடப்பட்டதன் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஊரடங்கை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், அது தொடர்பான உத்தரவு ஏதும் நேற்று மதியம் வரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் நேற்றும் சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி ஏராளமானோர் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் அதிகளவில் இயங்கின.
காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றவர்களை மறித்து எச்சரித்து அனுப்பினர். சில இடங்களில் அபராதமும் விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஊரடங்கின் நோக்கம் நிறைவேறும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT