Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளிக்கு செல்வதிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க மனு :

திருநெல்வேலி

கரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும், கோடை வெப்பம் அதிகரிப்பாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளித்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்றுதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி யுள்ளது.

இக்கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செ. பால்ராஜ் பள்ளி கல்வி இயக்குநருக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில்ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் 50 சதவீதம் பேர் பணிக்கு சென்று வருகிறார்கள். தற்போது கரோனா பரவல் 2-வது அலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இன்னும் 2, 3 வாரங்களுக்கு தொற்று பரவல் மிக அதிகமாகஇருக்கும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிக்குப்பின் பல்வேறு ஆசிரியர்கள் கரோனாதொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் மரணமடைந்துள்ளனர். எனவே, பேருந்துகளில் பள்ளிகளுக்கு சென்று வருவதில் மிகுந்தசிரமம் உள்ளது. குறிப்பாக ஆசிரியைகள் மிகுந்த அச்சம், மனஉளைச்சலுடனே சென்று வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகிறது.

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக கல்வியாண்டு முழுமைக்கும் மாணவர்கள் வருகை இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கரோனா தாக்கம் குறையும்வரை பள்ளிகளுக்கு செல்வதில் இருந்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏப்ரல்20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x