Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி செவிலியர்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி சேலம் ஆட்சியரிடம் பயிற்சி செவிலியர்கள் மனு அளித்தனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 மாணவியர் நான்காம் ஆண்டு செவிலியர் படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களில் பலர் கரோனா சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவர்கள் நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக பயிற்சி செவிலியர்கள் கூறியதாவது:
கரோனா பிரிவில் தினசரி 8 மணி நேரம் பணிபுரிகிறோம். இந்நிலையில், செவிலியர் மாணவியர் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனையில் இடம் இல்லாததால் விடுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், போதிய முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT