Published : 13 Jun 2025 05:48 AM
Last Updated : 13 Jun 2025 05:48 AM
விழுப்புரம்: உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த முடிவும் ஏற்படவில்லை.
நான் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும், அவர் (அன்புமணி) மக்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் எனக்கே பஞ்சாயத்து செய்வது என்பது எனது தலைவிதியாகும். தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். ஆனால், பேச்சுவார்த்தைக்கு செல்ல முயன்ற ஜி.கே.மணி உள்ளிட்ட இருவரையும் சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார். அதன் பிறகு எனக்கு கோபம் வந்து ‘நீயா - நானா?’ என பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
நான் 46 ஆண்டுகளாக மக்களுடன் பழகி வருகிறேன். உயிருக்கும் மேலான தெய்வங்களாக மக்களைக் கருதுகிறேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? இப்படிக் கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
நான் கட்டிய மாளிகையில்... நான் கட்டிய பாமக என்ற மாளிகையில், நான் குடியமர்த்திய நபரே, என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளன. நான் அழைத்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்களை வரவிடாமல் தடுத்து, என்னை மானபங்கம் செய்து விட்டார். அப்போது அவர் அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு அதிகாரம் வந்திருக்கும்.
குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. இதுவே நீதி, தர்மம். என்னை ‘குலசாமி’ என சொல்லிக் கொண்டே நெஞ்சில் குத்துகிறார், அதலபாதாளத்தில் தள்ள நினைக்கிறார், அவமானப்படுத்துகிறார், சிறுமைப்படுத்துகிறார். என்னையே இலக்காக்கி குறிவைத்து தாக்குகிறார். என் கை விரல் கொண்டே, என் கண்ணை குத்திக்கொண்டேன்.
உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார். என்னை நடை பிணமாக்கிவிட்டு, என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்யப் போகிறார். இது எல்லாமே நாடகம். ஒவ்வொருவரும் நடிகர்கள்.
ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு தலைவர் பதவி மீது விருப்பம் வந்துவிட்டது. அவரது மனைவியின் (சவுமியா) விருப்பப்படி, அன்புமணிக்கு முடி சூட்டப்பட்டது. அவரை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினேன்.
பாஜக காரணம் கிடையாது: எனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கட்சி மற்றும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றேன். ஆனால், இப்போது நடப்பது உங்களுக்கே தெரியும். அரசியலில் வாரிசு கிடையாது. நான் உங்களிடம் கட்சியை கொடுத்துவிட்டு, சென்று விடுவேன். பாமகவின் உட்கட்சிப் பிரச்சினையில் பாஜக பின்புலம் இல்லை.
யார் சொன்னாலும் அவர் (அன்புமணி) கேட்க மாட்டார். பிடிவாதத்தைக் கைவிட மாட்டார். அவர் கட்சியை சரியாக வழி நடத்தவில்லை. கட்சிப் பணிக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
தமிழகத்தில் 60 தொகுதிகளில் வலுவாக இருந்தால்தான், கூட்டணி பேச வருவார்கள். நாமும் வெற்றி பெறலாம், கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற முடியும். ஆனால், இதற்காக உழைக்க அவர் தயாராக இல்லை. தருமபுரியில் அவர் போட்டியிடாமல், திடீரென மனைவி சவுமியாவை போட்டியிட வைத்தார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு, எந்தக் குடும்பத்து பெண்களும் அரசியலுக்கு வரவில்லை. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகுதான், பிரேமலதா வந்துள்ளார். சரியாக செயல்படாததால் சமூக நீதி பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து பாலு நீக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான்தான் பாமகவுக்கு தலைவர்.
அன்புமணி யாரையும் சந்திக்க மாட்டார். ஆனால், தற்போது ‘கூவிக்கூவி’ அழைக்கிறார். `அப்பா சொல்லி விட்டார், நான் செயல் தலைவராக இருக்கிறேன், ஒரு தொண்டனாக இருந்தும் செயல்படுவேன்’ என சொல்லி இருந்தால், பிரச்சினை இருந்திருக்காது.
அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கமாட்டேன். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், பாமக நிறுவனர், தலைவர் இரண்டும் நான்தான். தொண்டர்கள், நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள். நாடும், மக்களும்தான் எனக்கு முக்கியம்.
கூட்டணி குறித்து பேசுவேன்: தலைவர் பதவி 3 ஆண்டுகள்தான். அன்புமணி பதவி முடிந்துவிட்டது. மீண்டும் பொதுக்குழு கூட்டி, தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தல் கூட்டணி குறித்து நான்தான் முடிவு செய்வேன். தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. கம்பு ஊன்றி நடக்கும் நிலை ஏற்பட்டாலும், மக்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று பாடுபடுவேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT