Published : 31 Oct 2025 02:35 PM
Last Updated : 31 Oct 2025 02:35 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான நவம்பர் மாத பலன்கள் @ 2025

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் மன வருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

அஸ்வினி: இந்த மாதம் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பரிகாரம்: ஆதி பராசக்தி அன்னையை வணங்குவது மூலம் நன்மை உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 20, 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 03, 04, 30 |

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் பணத் தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகி விடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.

பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், மேல் படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

ரோகிணி: இந்த மாதம் எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்குவது நன்மை தரும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 23, 24 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 05, 06 |

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் பொருளாதார முன்னேற்றம் பண வரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம்காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக் கவலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித் தனம்.

திருவாதிரை: இந்த மாதம் உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.

பரிகாரம்: நரசிம்ம பெருமாளை வணங்குவது நன்மை உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 25, 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 07, 08 |

இந்த மாதம் கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x